யாருடைய திருப்திக்காக கம்பீர் - கோலி மோதல்? - ஆர்சிபி வெற்றி பெற அவசரம் காட்டிய லக்னோ!

By ஆர்.முத்துக்குமார்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றதையடுத்து லக்னோ அணியின் சொந்த மண்ணான லக்னோ மைதானத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று பழி தீர்த்தது. இந்த ஆட்டத்தில் கோலியும் கம்பீரும் மோதிக் கொண்டனர். கோலியின் பாடி லாங்குவேஜ் ஆரம்பத்திலிருந்தே அதீதமாக இருந்ததை அனைவருமே தொலைக்காட்சியில் பார்த்திருப்பார்கள். ஆனால், 127 ரன்கள் இலக்கைக் கூட எடுக்க முடியாமல் ஒரு அணி தோற்கிறது என்றால், அந்தப் போட்டியின் நம்பகத்தன்மை மீது ஐயம் எழுவது இயல்பே.

முதலில் 62/0 என்ற நிலையிலிருந்து 10 விக்கெட்டுகளை அடுத்த 64 ரன்களில் இழந்தது ஆர்சிபி அணி. நவீன் உல் ஹக், ரவி பிஷ்னாய், அமித் மிஸ்ரா, கிருஷ்ணப்பா கவுதம் தங்களிடையே 8 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். சரி, 128 ரன்கள் இலக்கு துரத்தும் லக்னோ அணி எப்படி சேஸ் செய்ய வேண்டும்?

சிராஜ் இந்தத் தொடரில் சிறப்பாகவும் வெறியுடனும் வீசி வருகின்றார். அவர் வீசிய 2-வது பந்தையே கைல் மேயர்ஸ் அசிங்கமாக ஆடி மிட் ஆனில் கேட்ச் கொடுக்கின்றார் என்றால் சந்தேகமே எழுகிறது. என்னதான் பிட்ச் ஆக ஸ்லோவாக இருந்தாலும் என்னதான் பிட்ச் ஸ்பின் எடுத்தாலும் டெஸ்ட் போட்டி போல் ஆடினாலே இந்த இலக்கை எளிதில் எடுத்து விட முடியும். இது ராகுலுக்குத் தெரியாதா? ராகுல் காயம்! அது என்ன மாயமோ தெரியவில்லை. முக்கியமான போட்டியில் ராகுல் போன்ற ஸ்டார் பிளேயர் காயமடைந்து விடுகின்றார். குருணால் பாண்டியாதான் கேப்டன்.

கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்தவுடன் ஆக்டிங் கேப்டன் குருணால் பாண்டியா சிராஜை தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார். ஆனால், அடுத்த 4 ஓவர்களில் லக்னோ 4 விக்கெட்டுகளை இழந்தது. எப்படி என்றால்... உஷ்! கண்டுக்காதீங்க! மேக்ஸ்வெலின் ஒன்றுமில்லாத பந்தை தூக்கி கையில் கொடுத்துச் சென்றார் குருணால். ஆயுஷ் பதோனி இதற்கு முன்பு இவர் பொறுப்புடன் ஆடியதைப் பார்த்தோம். ஆனால் நேற்று என்ன கணக்கீடு என்பது புரியவில்லை. ஹேசில்வுட் பந்தை நேராக கவரில் கோலி கையில் அடித்து வெளியேறினார். தீபக் ஹூடா பின் காலை உள்ளே வைக்காமல் ஹசரங்காவிடம் எல்.பி. ஆனார்.

நிகலஸ் பூரன் சிக்சருடன் தொடங்கினார். ஆனால், அதேபோல் ஒரு பந்தை அடிக்க நினைத்து கேட்ச் ஆனார். ஏன் இத்தனை அவசரம்? ஆர்சிபி வெற்றி பெறுவதற்காக ஆடட்டும். ஆனால், இத்தனை அவசரமாக ஆடி அவுட் ஆக வேண்டுமா? கொஞ்சம் ஃபைட், கடைசி பந்து வரை எடுத்து சென்று த்ரில் ஆக கொண்டு போயிருக்கலாமே. ஆர்சிபி வெற்றி பெற ஆர்சிபி அணி காட்டிய அவசரத்தை விட லக்னோ காட்டிய அவசரம் ஆட்டத்தின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்து விட்டது என்றே கூற வேண்டும்.

கிருஷ்ணப்பா கவுதம் 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்து 10 ஓவர்களில் 64 ரன்களே தேவை என்ற நிலைக்குக் கொண்டு வந்தார். ஆனால், ஸ்டாய்னிஸ் பெரிய ஷாட் ஆடப்போய் தூக்கிக் கேட்ச் கொடுத்து விட்டுச் சென்றார். அடுத்த ஓவரில் கிருஷ்ணப்பா கவுதம் 2-வது ரன்னுக்காக ஓடி வந்த லட்சணமே அவர் அவுட் ஆவதற்காக என்பது தெரிந்தது. ராகுல் கடைசியில் இறங்கினாலும் அவரால் ஓட முடியவில்லை. ஒன்றும் செய்ய முடியவில்லை லக்னோ தோல்வி.

இதில் நவீன் உல் ஹக்கிற்கும் கோலிக்கும் இடையே ஆட்டத்தின்போது வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து லக்னோ கோச் கவுதம் கம்பீர் ஆட்டம் முடிந்தவுடன் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட இருவரையும் விலக்கி விட நேரிட்டது. இருவருக்கும் 100% ஆட்டத்தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டது.

அன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் வென்றபோது கவுதம் கம்பீர் வெற்றியைக் கொண்டாட செய்த செய்கையை நேற்று கோலி திருப்பிக் கொடுத்தார். இது ஒரு சிறுபிள்ளைத் தனமான வாய்க்காத் தகராறு என்றாலும் சுலபமாக லக்னோ வெல்ல வேண்டிய போட்டியில் ஆர்சிபி தாங்கள் வெற்றி பெறக் காட்டிய அவசரத்தை விட பெரிய அவசரம் காட்டிய லக்னோ ஆடிய விதம் குறித்து உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐயம் எழவே செய்யும். நம்பகத்தன்மையற்ற இந்தப் போட்டிக்கு வெளியிலிருந்து ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இருவரும் மோதிக்கொண்டார்களா என்ற ஐயமே நேற்றைய போட்டியைப் பார்த்த பிறகு எஞ்சியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE