லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டியில் ஃபீல்டிங் செய்த போது லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயமடைந்தார்.
127 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. அந்த அணிக்காக மேயர்ஸ் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஃபார்மில் உள்ள மேயர்ஸ் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் விக்கெட்டை இழந்தார். சிராஜ் அந்த ஓவரை வீசி இருந்தார்.
பவர் பிளே ஓவர்களில் மேயர்ஸ், க்ருணல் பாண்டியா, பதோனி மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பின்னரும் நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் பூரன், ஸ்டாய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம், ரவி பிஷ்னோய் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதில் கவுதம் மற்றும் பிஷ்னோய் ரன் அவுட்டாகி வெளியேறினர். நவீன்-உல்-ஹக் 13 ரன்களில் வெளியேறினார். 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் காயமடைந்த ராகுல் பேட் செய்ய வந்தார்.
கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். அந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே எடுத்து 5 பந்துகளை சந்தித்த நிலையில் லக்னோ ஆல் அவுட் ஆனது.