கொல்கத்தா: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 179 ரன்களை சேர்த்துள்ளது.
16ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய 39-வது லீக் ஆடத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெகதீசன் 15 ரன்களில் 2ஆவது ஓவரிலேயே கிளம்பிவிட்டார்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒருபுறம் சரியாத சுவர்போல நிலைத்து நிற்க, மறுபுறம் வந்த ஷர்துல் தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமலும், வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களிலும், நிதிஷ் ராணா 4 ரன்களிலும் வெளியேறினர். 7 சிக்சர்களை விளாசி 39 பந்துகளில் 81 ரன்களை குவித்து அதிரடி காட்டிய ரஹ்மானுல்லா குர்பாஸை, நூர் அகமது விக்கெட்டாக்கி குஜராத் அணி பெருமூச்சு விடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.
ரின்கு சிங்கும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த, ஆண்ட்ரே ரஸ்ஸல் 3 சிக்சர்களை அடித்து நம்பிக்கை கொடுத்தாலும் இறுதிப் பந்தில் அவுட்டாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 179 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முஹம்மது சமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது, ஜோசுவா லிட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.