“ஒழுங்காக ஆடவில்லை எனில் அவ்வளவுதான்!” - டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் எச்சரிக்கை

By ஆர்.முத்துக்குமார்

நடப்பு ஐபிஎல் தொடர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு படுமோசமான தொடராக அமைந்து வருகின்றது. 7 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. டேவிட் வார்னர் தலைமையில் அணியின் சரியான சேர்க்கையை, வெற்றிச் சேர்க்கையை அமைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் விதம் விதமான சேர்க்கையில் இறங்குகின்றனர். 7 போட்டிகளுக்கு பிரிதிவி ஷாவை நம்பினர். ஆனால், அதன் பிறகு அவரை ட்ராப் செய்து விட்டனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயங்கர சொதப்பலாக உள்ளது. வார்னர் பேட்டிங்கிலும் ஆன்ரிச் நோர்க்கியா பந்து வீச்சிலும் பிரகாசித்து வருகின்றனர். ஆனால் மற்ற ஓவர்சீஸ் வீரர்களான மிட்செல் மார்ஷ், ரைலி ரூசோவ் சரியாக ஆடவில்லை. இப்போது, பில் சால்ட், ரோவ்மென் போவெல், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் இவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. டேவிட் வார்னர் ஸ்ட்ரைக் ரேட் சொல்லிக்கொள்ளும்படியில்லை என்பதோடு டி20 கிரிக்கெட்டுக்கு அந்த ஸ்ட்ரைக் ரேட் போதாது.

இந்நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் கடுமையாக வீரர்களை எச்சரித்தார். “ஆம்! ஓவர்சீஸ் வீரர்களை பயன்படுத்திப் பார்த்தோம். அவர்கள் இன்னும் சரியான நிலைக்கு வரவில்லை. ரைலி ரூசோவ் ஆரம்பத்தில் 2 போட்டிகள் ஆடினார். ரைலி ரூசோவ் 2 போட்டிகளில் ஆடினார். ஓவர்சீஸ் பிளேயர்களில் சரியான அணிச்சேர்க்கைக்காக போராடி வருகின்றோம்.

மிட்செல் மார்ஷ் எங்களுக்கு முக்கியம், அவர் 4 ஓவர்களை வீசக்கூடியவர். பேட்டிங்கில் டாப் ஆர்டரில் நன்றாக ஆடுபவர். அவரை அணியில் இருந்து தூக்க நேரிட்டல் உடனேயே 5 பவுலர்களுடன் களமிறங்க வேண்டி வருகிறது. 5 பவுலர்களுடன் இறங்குவது டி20க்கு நல்லதல்ல. 6 பவுலர்கள் தேவை. அப்போதுதான் சரியாக இருக்கும். மிட்செல் மார்ஷ் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் செம பார்மில் இருந்தார். ரோவ்மென் போவெல், இந்தியா பிட்ச்கள் போன்ற பிட்ச்களில்தான் மே.இ.தீவுகளில் ஆடுகின்றார், எனவே பிட்ச்களில் பிரச்சனையில்லை.

ஆகவே, எங்கள் பேட்டிங் யூனிட்டுடன் அமர்ந்து விவாதிக்கப் போகின்றேன். ஏனெனில் நல்ல முறையில் பயிற்சி செய்கின்றோம். பயிற்சியில் வருவது ஏன் போட்டிகளில் வெளிப்படுவதில்லை. இதைத்தான் நான் அங்கு சீரியசாக அவர்களிடம் கூறப்போகின்றேன். எனவே இதைத்தான் பேசப் போகின்றோம். மேலும் வித்தியாசமான முயற்சிகளை எடுப்பது பற்றியும் விவாதித்துள்ளோம். இன்றைய போட்டியில் வித்தியாசமான டெல்லி அணியை பார்ப்பீர்கள்.

பேட்டர்கள் ஒன்றாம் நிலையிலிருந்து 8-ஆம் நிலையில் இறங்குபவர்கள் வரை பங்களிப்பு செய்தாக வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு கஷ்டம்தான். அந்தந்த வீரர்கள் அவர்கள் முறை வரும்போது எழுந்து நின்று போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும். இதைத்தான் எதிர்பார்க்கின்றேன், இதைச் செய்ய முடியவில்லை, அவர்களின் நிலை கடினம்தான். ஆகவேதான் கூறுகின்றேன் நாம் ஒழுங்காக ஆடினால் அதிர்ஷ்டம் நம் பக்கம் திரும்பும். இதே வீரர்கள் பெரிய ஸ்கோர்களை எடுப்பார்கள்” என்றார் பான்டிங்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE