IPL 2023: CSK vs RR | எடுபடாத சிஎஸ்கே பவுலிங் - ஜெய்ஸ்வால் அதிரடியால் ராஜஸ்தான் 202 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 202 ரன்களை சேர்த்துள்ளது.

16ஆவது ஐபிஎல் தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய 37-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. ஜெயப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜாஸ் பட்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 8ஆவது ஓவரில் இவர்களின் பாட்னர்ஷிப்பை ஜடேஜா பிரித்து பட்லரை 27 ரன்களுடன் வெளியேற்றினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் பெரிய அளவில் சோபிக்காமல் 17 ரன்களுடன் நடையைக்கட்டினார். 43 பந்துகளில் 77 ரன்களை குவித்து 4 சிக்சர்களுடன் அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் துஷார் தேஷ்பாண்டே அவுட்டாக்க, ராஜஸ்தானின் ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. ஹெட்மேயர் 10 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

தேவ்தட் படிக்கல், துருவ் ஜூரல் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். துருவ் ஜூரல் 2 சிக்சர்களை அடித்து அதிரடி காட்டினாலும் ரன்அவுட்டாகி ஏமாற்றமளிக்க இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 202 குவித்தது. 27 ரன்களுடன் தேவ்தட் படிக்கலும், 1 ரன்னுடன் அஸ்வினும் களத்தில் இருந்தனர்.

சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, மஹீஷ் தீக்சனா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE