IPL 2023 | பந்துவீச்சாளர்கள் மீது ரோஹித் சர்மா அதிருப்தி

By செய்திப்பிரிவு

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் ரோஹித் சர்மா கூறியதாவது: இந்தத் தொடரில் எங்களது பந்துவீச்சு அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் ரன்களை வாரி வழங்கிவிட்டனர்.

இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளை பெற்றுள்ளோம். தோல்வி பற்றி கவலைப்பட்டு இப்போது எதுவும் நடக்கப் போவதில்லை. இன்னும் எங்களுக்கு 8 போட்டிகள் உள்ளன. பந்துவீச்சில் நாங்கள் தவறுகள் செய்தாலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேமரூன் கிரீனின் ஆட்டம் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர்கள் பேட்டிங் செய்த விதம் எங்களை ஆட்டத்தின் கடைசி பந்து வரைக்கும் கொண்டு சென்றது. கடைசி நேரத்தில் அற்புதமாக 2 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் சிங்குக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE