கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
236 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு முதல் இரண்டு ஓவர்களில் ஓப்பனிங் வீரர்களை அவுட் ஆக்கி அதிர்ச்சி அளித்தனர் சென்னை பவுலர்கள். முதல் ஓவரை வீசிய ஆகாஷ் சிங் தனது நான்காவது பந்தில் சுனில் நரைனை கிளீன் போல்டக்கினார். துஷார் தேஷ்பாண்டே அடுத்த ஓவரில் நாராயண் ஜெகதீசனை அவுட் ஆக்கினார்.
சிறிதுநேரம் நிலைத்து ஆட போராடிய வெங்கடேஷ் ஐயரை 20 ரன்களில் மொயீன் அலி வெளியேற்ற, கொல்கத்தா கேப்டன் நிதீஷ் ராணாவை 27 ரன்களில் நடையைக் கட்ட வைத்தார் ஜடேஜா.
விக்கெட் சரிவுகளுக்கு மத்தியில் ஜேசன் ராய் மரண அடி அடித்து சென்னை பவுலர்களுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தினார். 19 பந்துகளில் அரைசதம் கடந்த ராய், 61 ரன்கள் எடுத்திருந்தபோது தீக்சனா போல்டாக்க கொல்கத்தா ரசிகர்களின் ஆரவாரம் அமைதியானது. இதன்பின் வந்தவர்களில் ரிங்கு சிங் மட்டுமே அணிக்காக போராடினார். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. நடப்பு சீசனில் சென்னை அணி பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.
கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் தீக்சனா மற்றும் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
சிஎஸ்கே இன்னிங்ஸ்: ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணிக்கு வழக்கம்போல் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஓப்பனிங் செய்தனர்.
ருதுராஜ் தனக்கே உரித்தான அட்டாக்கிங் பாணியில் இன்னிங்ஸை தொடங்க, கான்வே அவருக்கு பக்கபலமாக இருந்தார். பவர் பிளே ஓவர்களில் பந்துகளை எல்லைக்கோடுகளுக்கு பறக்கவிட்ட இக்கூட்டணி ஓவருக்கு 10 ரன் ரேட்டில் விரைவாக ரன்களை சேர்த்தது. பார்ட்னர்ஷிப் மூலம் 73 ரன்கள் சேர்த்த நிலையில் இக்கூட்டணியை சுயாஷ் சர்மா பிரித்தார்.
35 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் முதல் விக்கெட்டாக வெளியேறினார். இதன்பின் ரஹானே களம்புகுந்தார். கான்வே நிதானம் கடைபிடிக்க, ரஹானே அதிரடி காட்டினார். கான்வே இந்த சீஸனின் 4வது அரைசதத்தை கடந்து 56 ரன்கள் சேர்த்திருந்தபோது வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் அவுட் ஆகினார்.
இதன்பின் சிஎஸ்கேவின் பேட்டிங் இன்னும் அதிரடி கண்டது. நான்காவது வீரராக களமிறங்கிய ஷிவம் துபே சிக்ஸர் மழை பொழிந்தார். ஐந்து சிக்ஸர்களுடன் 20 பந்தில் அரைசதம் தொட்ட துபே, அடுத்த பந்தில் விக்கெட்டானர். அவருக்கு முன்னதாகவே, 24 பந்தில் அரைசதம் கடந்த ரஹானே தனது அதிரடியை தொடர்ந்தார்.
இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாக அமைந்தது. ரஹானே கடைசி வரை ஆட்டமிழக்காமல், 29 பந்துகளை சந்தித்து 71 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடக்கம்.
கொல்கத்தா தரப்பில் குல்வந்த் கெஜ்ரோலியா அதிகபட்சமாக இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.