IPL 2023: KKR vs CSK | ரஹானே 24, ஷிவம் துபே 20 பந்துகள் - 3 அரைசதங்களால் சிஎஸ்கே 235 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 235 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணிக்கு வழக்கம்போல் டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஓப்பனிங் செய்தனர்.

ருதுராஜ் தனக்கே உரித்தான அட்டாக்கிங் பாணியில் இன்னிங்ஸை தொடங்க, கான்வே அவருக்கு பக்கபலமாக இருந்தார். பவர் பிளே ஓவர்களில் பந்துகளை எல்லைக்கோடுகளுக்கு பறக்கவிட்ட இக்கூட்டணி ஓவருக்கு 10 ரன் ரேட்டில் விரைவாக ரன்களை சேர்த்தது. பார்ட்னர்ஷிப் மூலம் 73 ரன்கள் சேர்த்த நிலையில் இக்கூட்டணியை சுயாஷ் சர்மா பிரித்தார்.

35 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் முதல் விக்கெட்டாக வெளியேறினார். இதன்பின் ரஹானே களம்புகுந்தார். கான்வே நிதானம் கடைபிடிக்க, ரஹானே அதிரடி காட்டினார். கான்வே இந்த சீஸனின் 4வது அரைசதத்தை கடந்து 56 ரன்கள் சேர்த்திருந்தபோது வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் அவுட் ஆகினார்.

இதன்பின் சிஎஸ்கேவின் பேட்டிங் இன்னும் அதிரடி கண்டது. நான்காவது வீரராக களமிறங்கிய ஷிவம் துபே சிக்ஸர் மழை பொழிந்தார். ஐந்து சிக்ஸர்களுடன் 20 பந்தில் அரைசதம் தொட்ட துபே, அடுத்த பந்தில் விக்கெட்டானர். அவருக்கு முன்னதாகவே, 24 பந்தில் அரைசதம் கடந்த ரஹானே தனது அதிரடியை தொடர்ந்தார்.

இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாக அமைந்தது. ரஹானே கடைசி வரை ஆட்டமிழக்காமல், 29 பந்துகளை சந்தித்து 71 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடக்கம்.

கொல்கத்தா தரப்பில் குல்வந்த் கெஜ்ரோலியா அதிகபட்சமாக இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE