சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக சிராஜ் புகார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: அணியின் விவரங்கள் குறித்து தன்னிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஊழல் தடுப்பு பிரிவு உறுதி செய்துள்ளது. இதனை பிசிசிஐ தரப்பிடம் சிராஜ் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் இந்த சூதாட்ட புகாருக்கும், நடப்பு ஐபிஎல் சீசனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற போது இது நடந்தது என பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவில் வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன.

சிராஜை வாட்ஸ் அப் மூலம் கடந்த ஆண்டு நவம்பரில் அந்த நபர் தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அவர் பிசிசிஐ வசம் தெரிவித்துள்ளார். வீரர்களுக்கு இது குறித்து போதுமான விழிப்புணர்வு அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிராஜை தொடர்பு கொண்ட அந்த நபர் புக்கி இல்லை என்றும், அவர் ரசிகர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்டிங்கில் பணம் இழந்த காரணத்தால் அவர் சிராஜை தொடர்பு கொண்டுள்ளார். அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்த சிராஜ், பிசிசிஐ வசம் பகிர்ந்துள்ளார்.

இந்தச் சூழலில் சிராஜை தொடர்பு கொண்டது ஆட்டோ டிரைவர் என்றும், அவர் ஆர்சிபி அணி விவரத்தை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE