'நாளுக்கு நாள் தேறி வருகிறேன்' - டெல்லி கேபிடல்ஸ் அணியினரை சந்தித்த ரிஷப் பந்த்!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ‘நாளுக்கு நாள் நான் தேறி வருகிறேன்’ என இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியினரை சந்தித்த பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்தபோது ரிஷப் பந்த் விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு மோசமான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஐபிஎல் கிரிக்கெட்டில் தான் விளையாடி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணியினரை சந்தித்திருந்தார்.

“நான் சிறப்பாக குணமடைந்து வருகிறேன். நாளுக்கு நாள் நல்ல முறையில் தேறி வருகிறேன். காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன். நான் பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்தேன். அந்த நேரத்தில் டெல்லி அணியினரும் பெங்களூரு வந்திருந்தனர். அதனால் அணியினரை நான் சந்தித்தேன். அணியினரின் பயிற்சியை பார்த்தேன். அணியினருடன் இருக்க விரும்புகிறேன். காயம் காரணமாக அதை நான் மிஸ் செய்கிறேன். எனது எண்ணம் எல்லாம் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன்தான் இருக்கிறது. போட்டியை எதிர்கொள்ளும் அணிக்கு எனது வாழ்த்துகள்” என பந்த் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் மட்டுமல்லாது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆசியக் கோப்பை தொடர், ஒருநாள் உலகக் கோப்பை தொடர் உட்பட முக்கிய தொடர்களை காயம் காரணமாக பந்த் மிஸ் செய்வார். நடப்பு சீசனில் டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வியை தழுவி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE