ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 14-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஹைதராபாத் அணி விரட்டி வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஷிகர் தவன் தலைமையிலான பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. தவான் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 66 பந்துகளில் 99 ரன்கள் குவித்தார். 12 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். இருந்தும் அவருடன் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று பேட் செய்யாத காரணத்தால் பெரிய இலக்கை நிர்ணயிக்க தவறியது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணிக்காக ஹாரி ப்ரூக் மற்றும் மயங்க் அகர்வால் களம் கண்டனர். ப்ரூக் 13 ரன்களிலும், மயங்க் 21 ரன்களிலும் வெளியேறினார். பின்னர் வந்த அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் உடன் கூட்டணி அமைத்தார் ராகுல் திரிபாதி.
17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஹைதராபாத். திரிபாதி 48 பந்துகளில் 74 ரன்களுடனும், மார்க்ரம் 21 பந்துகளில் 37 ரன்களுடனும் ஆட்டத்தை நிறைவு செய்தனர். பஞ்சாப் அணி இந்த சீசனில் பெற்றுள்ள முதல் தோல்வியாக இது அமைந்துள்ளது. அதே போல நடப்பு சீசனில் ஹைதராபாத் அணியின் முதல் வெற்றி இது.