IPL 2023: RR vs DC | பட்லர் - ஜெய்ஸ்வால் கூட்டணியால் மீண்டும் ஜொலித்த ராஜஸ்தான்: டெல்லிக்கு 200 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

கவுஹாத்தி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 199 ரன்களை சேர்த்துள்ளது.

16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 8 ஓவர் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்களில் முகேஷ் குமார் வீசிய பந்தில் அவுட்டானார்.

அவருக்கு அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ரியான் பராக் 7 ரன்களில் கிளம்ப மறுபுறும் பட்லர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். அதனால் ராஜஸ்தான் அணி 16 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்திருந்தது. பட்லருக்கு உறுதுணையாக நின்று ஹெட்மேயர் சிக்ஸர்களை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். டெல்லி அணிக்கு தண்ணி காட்டிய பட்லரை முகேஷ்குமார் 79 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 199 ரன்களைச் சேர்த்தது. ஹெட்மேயர் 21 பந்துகளில் 39 ரன்களுடனும், துருவ் ஜூரல் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி அணி தரப்பில் முகேஷ்குமார் 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ரோவ்மேன் பவல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE