“சன்ரைசர்ஸ் பேட்டிங் ஒன்றும் தேறாது; மேட்ச் செம அறுவை” - ஹர்பஜன் சிங் சாடல் 

By ஆர்.முத்துக்குமார்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டியில் சன் ரைசர்ஸ் படுமோசமாக தோற்றதையடுத்து அந்த அணியின் பேட்டிங் தேறாது போல் தெரிகிறது என்று இந்திய முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சன் ரைசர்ஸ் கேப்டன் அய்டன் மார்க்ரம் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பிட்ச் மிகவும் மந்தமான பிட்ச். பந்துகள் மட்டைக்கு சடுதியில் வராத பிட்ச். இதில் சன் ரைசர்ஸ் வெறும் 121 ரன்களையே எடுத்தனர். பார்மில் இல்லாத குருணால் பாண்டியாவிடம் 3 விக்கெட்டுகளைக் கொடுத்தனர். ஐபிஎல் தொடரின் அவரது 2வது சிறந்த பந்து வீச்சாகும் இது. குருணால் பாண்டியாவிடம் மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், கேப்டன் அய்டன் மார்க்ரம் ஆகியோர் ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் எடுத்தார். ஆனால், இவரும் யாஷ் தாக்கூர் பந்தில் ஷார்ட் தேர்ட் மேனில் அமித் மிஸ்ராவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

கடைசி ஓவரை ஜெயதேவ் உனாட்கட் வீசியபோது சன் ரைசர்ஸ் அணியின் அதிரடி வீரர் அப்துல் சமது 2 பெரிய சிக்சர்களை விளாசினார். இந்த மேட்சைப் பற்றி அலசிய ஹர்பஜன் சிங் யூ டியூப் சேனலில் கூறியதாவது: “சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஒவர்கள் ஆடி 170-190 ரன்களைக் குவிக்கக் கூடிய அணியாகத் தெரியவில்லை. அதுவும் மார்க்ரம் அடிக்கவில்லை எனில் மிகவும் சிரமமாகி விடுகின்றது அந்த அணிக்கு. திரிபாதி திறமையானவர்தான். ஆனால், இந்த சீசனில் இதுவரை அவர் பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை. ஒருவேளை இனி வரும் போட்டிகளில் அவரது பங்களிப்பு இன்னும் வலுவாக இருக்கலாம்.

அன்மோல்பிரீத் நன்றாகத் தொடங்கினார் (26 பந்துகளில் 31 ரன்கள்). ஆனால், இவரை குருணால் பாண்டியா வீழ்த்தினார். குருணால் அற்புதமாக வீசினார். இதில் சந்தேகமில்லை. பெரிய ஷாட்களை அடிக்கும் வாய்ப்பை குருணால் அளிக்கவில்லை. பிஷ்னாய் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் சிறப்பாகவே வீசினார். டைட்டாக வைத்திருந்தார். அமித் மிஸ்ராவை பாராட்டியே தீர வேண்டும். 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்லோ பந்துகளை லாங் பவுண்டரி என்பதால் திறம்பட வீசினார்.

ராகுல் கேப்டன்சி அபாரமாக இருந்தது. சேசிங்கில் பெரிய ஷாட்களை ஆட வேண்டிய அவசியமில்லை, சாதாரணமாக ஆடினாலே போதும் என்கிற இலக்குதான். ராகுல் 35 ரன்களையும் குருணால் 34 ரன்களையும் எடுத்தனர். லக்னோவுக்கு சுலபமாக 2 புள்ளிகள் கிடைத்த போட்டியாகும் இது. இந்த ஆட்டமே வெறும் அறுவையாக இருந்தது. ஸ்கோர் இல்லை, பிட்ச் மிக மிக மந்தம். சன் ரைசர்ஸ் சரணடைந்தது” என்றார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அடுத்ததாக ஆர்சிபியை ஏப்ரல் 10ம் தேதி சந்திக்க, 9ம் தேதி சன் ரைசர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கின்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE