“யார்க்கர் தெரியாவிட்டால் பந்துவீச்சாளராக நீடிக்க முடியாது” - பிராவோ

By செய்திப்பிரிவு

சென்னை: யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.

20 -20 கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஓவர்களின் நிபுணராக கருதப்பட்டவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் டேவின் பிராவோ. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ப்ராவோ தற்போது அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் இளம் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழிங்கி இருக்கிறார். அதில் பிராவோ பேசும்போது, “என்னை கேட்டால் யாக்கர்தான் சிறந்தது என்று கூறுவேன். ஆனால், பந்துவீச்சாளராக யாக்கர் வீசுவதுதான் கடினமான ஒன்று. இதற்கு நீங்கள் பல மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும். பந்தை நேராக வீசுவது எப்படி, பந்தை சற்று நகர்த்தி விசுவது எப்படி என்பதை பயிற்சிகள் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும். பயிற்சிகள்தான் பந்துவீசும் முறைகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு பந்துவீச்சாளராக உங்களுக்கு யார்க்கர் போடுவது தெரிந்திருக்க வேண்டும், அல்லது பந்துவீசும் வேகத்தில் 150+ஐ தொடும் பந்துவீச்சாளராக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் இந்த கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடித்திருக்க முடியும்.

நீங்கள் 150-க்கு மேலான வேகத்தில் பந்து வீசினாலும், நீங்கள் யார்க்கரை நம்பியிருக்க வேண்டிய தருணம் வரும். உண்மையில் யாக்கர் போடுவதற்கு கடினமாக இருந்தாலும் அதுவே சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் எப்போதெல்லாம் அழுத்தத்தை உணர்கிறீர்களோ அப்போது நீங்க போட வேண்டியது யாக்கர்தான்” என்று பேசினார்.

20-20 கிரிக்கெட் போட்டிகளில் முதலில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளராக ப்ராவோ அறியப்படுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE