ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 203 ரன்களை குவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் நான்காவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தது. அதிரடி காட்டிய இந்த இணையை 6வது ஓவரில் ஃபசல்ஹக் பாரூக்கி பிரித்து பட்லரை 54 ரன்களில் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 54 ரன்களில் அவுட்டானார்.
தேவ்தட் படிக்கல் 2 ரன்களிலும், ரியான் பராக் 7 ரன்களிலும் விக்கெட்டாக மற்றொருபுறம் சஞ்சு சாம்சன் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால் அவரும் 19வது ஓவரில் நடராஜனால் 55 ரன்களில் விக்கெட்டானார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. ஹெட்மேயர் 22 ரன்களுடனும், அஸ்வின் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
ஹைதராபாத் அணி தரப்பில் ஃபசல்ஹக் பாரூக்கி, நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.