டாக்கா: நடப்பு டி20 உலக சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது வங்கதேச அணி. டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேசம். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) டாக்கா நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியை 20 ஓவர்களில் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுக்க அனுமதித்தது வங்கதேசம்.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. நஜ்முல் ஹுசைன் சாண்டோவின் நிதான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. 47 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார் அவர். அவரது இன்னிங்ஸில் மூன்று பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது வங்கதேசம்.
நஜ்முல் ஹுசைன் இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். முதல் போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
» விருதுநகர்: வீட்டை இடிக்காமல் ஜாக்கியால் 12 அடி நகர்த்திய விவசாயி
» “அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது” - இயக்குநர் விக்னேஷ் சிவன்