அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 571 ரன்கள் எடுத்துள்ளது. முதுகு வலி காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் இந்த இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை. இந்த இன்னிங்ஸில் விராட் கோலி, 186 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி பேட்ஸ்மேன்கள் முதல் ஆறு விக்கெட் வரை 50 ரன்களுக்கும் கூடுதலாக பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக படைக்கப்பட்டுள்ள சாதனையாகும்.
கே.எஸ்.பரத் 44 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த அக்சர் படேல், சிக்சர் மழை பொழிந்தார். 113 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் அக்சர். அதன் பின்னர் அஸ்வின், உமேஷ் யாதவ் மற்றும் கோலி ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர். தேநீர் நேர இடைவேளைக்கு பிறகு இன்னிங்ஸில் வேகத்தை கூட்டியது இந்தியா. தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. ட்ரேவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ குனேமன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டுள்ளனர்.