அகமதாபாத்: எதிர்வரும் 9-ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் மைதானத்தில் நேரில் வந்து பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நான் இந்தியா வருகிறேன். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பொருளாதாரம், விளையாட்டு மற்றும் கல்வி உறவுகளை ஆழப்படுத்தவும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என கடந்த சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ட்வீட் செய்திருந்தார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கம் இருநாட்டு தலைவர்களும் நான்காவது டெஸ்ட் போட்டியை பார்ப்பார்கள் என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்காது என தகவல். மேலும், இந்தப் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
» ‘கைதி’ இந்தி ரீமேக்கா இது? - வெளியானது ‘போலா’ ட்ரெய்லர்!
» மகளிர் தினம் | கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளி மகளிர் மொபட் பேரணி