இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

48 வயதான அவர் தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர். பயிற்சியாளராக சுமார் 25 ஆண்டுகால அனுபவம் கொண்டவர். 2014 முதல் 2018 வரையில் அயர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு பெல்ஜியம் ஹாக்கி அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். இந்த காலகட்டத்தில் 2018 உலகக் கோப்பை தொடர் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது பெல்ஜியம் அணி. FIH சிறந்த ஹாக்கி பயிற்சியாளர் விருதையும் வென்றுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக சுமார் 195 போட்டிகளில் 10 ஆண்டு காலம் விளையாடி உள்ளார். வெகு விரைவில் இவர் இந்திய அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பெருமைக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரீட், உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு விலகி இருந்தார். அவருக்கு மாற்றாக அந்த பணியை ஃபுல்டன் கவனிக்க உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE