IPL 2023 | சென்னை வந்தடைந்தார் சிஎஸ்கே தலைமகன் தோனி

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னை வந்தடைந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர் சென்னைக்கு வருகை தரும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வரும் 31-ம் தேதி ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்நிலையில், இதற்கு தயாராகும் வகையில் தோனி, சென்னை வந்துள்ளார்.

அடுத்து வரும் நாட்களில் அவர் சென்னையில் பயிற்சி மேற்கொள்வார் என தெரிகிறது. கடந்த சில வாரங்களாகவே தோனி, ராஞ்சியில் ஐபிஎல் சீசனுக்காக பயிற்சி மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கரோனா பரவல் காரணமாக கடந்த சில சீசன்களாக ஐபிஎல் போட்டிகள் குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டுமே நடைபெற்றன. இந்த சூழலில் சென்னை மண்ணில் எதிர்வரும் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 போட்டிகளில் சிஎஸ்கே விளையாட உள்ளது. தனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னை மண்ணில்தான் அரங்கேறும் என தோனி முன்னர் தெரிவித்திருந்தார். இருந்தும் அது எப்போது என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE