மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப், இந்திய வீரர் கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். கே.எல்.ராகுல் உட்பட எந்தவொரு வீரரையும் ட்ரோல் செய்வது அவர்களை புண்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
கே.எல்.ராகுல் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அணியில் அவரது ரோல் குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். அதன் பிறகு இந்த டாக் இணையவெளியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஆகாஷ் சோப்ரா, ராகுல் விஷயத்தில் எதிரும் புதிருமாக நின்று விவாதம் செய்து வருகின்றனர். இது தனிப்பட்ட ரீதியலான வார்த்தை போராகவும் மாறியுள்ளது. இந்த சூழலில் இயன் பிஷப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“இந்த விவாதத்தில் எனக்கு எந்த கருத்தும் சொல்வதற்கு இல்லை. இது மாதிரியான சூழலை ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் கடந்து வந்தாக வேண்டும். அதுவும் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இந்த விமர்சனங்கள் ஆயிரம் மடங்கு இன்னும் அதிகம் இருக்கும்.
அவரது பெயர் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யபடுவதை பார்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவர் திறமையான கிரிக்கெட் வீரர். விரைவில் அனைத்து பார்மெட்டிலும் ரன் சேர்ப்பார். அதற்கு சில காலம் பிடிக்கலாம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு விமர்சனங்கள் வைப்பது சரியாக இருக்கலாம். ஆனால், அவரும் சக மனிதர் தான்” என பிஷப் தெரிவித்துள்ளார்.