டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசிய ஒரே இந்திய கேப்டன்: ரோகித் சாதனை

By செய்திப்பிரிவு

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசிய ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறையும், டி20 கிரிக்கெட்டில் 2 முறையும் ரோகித் சதம் பதிவு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசியவர்களாக இலங்கையின் தில்ஷன், தென் ஆப்பிரிக்காவின் டூப்ளசி மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் டாப் ஆர்டர் தடுமாறிய போதும் ரோகித் நிலைத்து நின்று ஆடி சதம் பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் இது. 35 வயதான அவர் 45 டெஸ்ட் போட்டிகளில் 3,137 ரன்கள் இதுவரை பதிவு செய்துள்ளார். 9 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் இதில் அடங்கும்.

2019 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஓப்பனராக 6 முறை சதம் பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் பதிவு செய்துள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் சதம் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE