'நாலுதெச திறந்திருக்கு... நடக்குற தெம்பிருக்கு... முன்னே நீ எட்டு வையடா' - ஊன்றுகோலை தாங்கி நடக்கும் பந்த்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷப் பந்த் காயம்பட்ட நிலையில் ஊன்றுகோலை தாங்கியபடி நடக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவர் விரைந்து நலம் பெற வேண்டி தங்களது அன்பை அந்த பதிவில் பொழிந்து வருகின்றனர்.

2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது.

முதலில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சைக்காக கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவரும் விரைவில் களத்தில் சந்திக்கலாம் என ட்வீட் செய்திருந்தார்.

இந்த சூழலில் தற்போது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பந்த் பகிர்ந்துள்ளார். ‘முன்னோக்கி எடுத்து வைத்த வலியமையான, சிறப்பான ஒரு அடி’ என கேப்ஷன் கொடுத்து ஊன்றுகோலை தாங்கி செல்லும் படத்தை பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் உங்களை மிஸ் செய்கிறோம் என்பது முதல் விரைந்து நலம் பெற வேண்டும் என சொல்லி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE