ஆஸ்திரேலிய ஓபன் | 2022-ல் விளையாட தடை, 2023-ல் சாம்பியன்: ஜோகோவிச் சாதனை

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க செர்பியாவின் ஜோகோவிச்சுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலிய அரசு. நடப்பு ஆண்டில் அவர் அதே ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இது வெறும் வெற்றி மட்டும் அல்ல. கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இதன் மூலம் பத்தாவது முறையாக அவர் சாம்பியன் ஆகியுள்ளார். 35 வயதான அவர் 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020, 2021, 2023 என ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதோடு ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை இந்த வெற்றியின் மூலம் சமன் செய்துள்ளார். நடால் மற்றும் ஜோகோவிச் என இருவரும் 22 முறை பட்டம் வென்றுள்ளனர்.

கடந்த ஆண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தினார். இருந்தும் அவரால் கடந்த முறை பங்கேற்க முடியவில்லை. இந்த ஆண்டு அவர் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபஸை 6-3, 7-6(4), 7-6(5) என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE