IND vs NZ 3-வது ODI | சதம் விளாசிய ரோகித், கில்: இந்தியா 385 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

இந்தூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் என தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் விளாசி அசத்தினர். முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவர்களில் பாண்டியா சிறப்பாக விளையாடி அரைசதம் பதிவு செய்தார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்ற நிலையில் மூன்றாவது போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் மற்றும் கில் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 212 ரன்கள் சேர்த்தனர். ஒரே ஓவரில் இருவரும் சதம் பதிவு செய்து மாஸ் காட்டினர்.

ரோகித், 85 பந்துகளில் 101 ரன்கள் குவித்து வெளியேறினார். கில், 78 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் இஷான் கிஷன், கோலி, சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அந்த சமயத்தில் இந்திய அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை.

பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் இணைந்து 54 ரன்களுக்கு 7-வது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தாக்கூர், 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாண்டியா, 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து விரட்டுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE