IND vs NZ முதல் ODI | 208 ரன்கள் குவித்து 'ஒன் மேன் ஷோ' காட்டிய கில்: நியூஸி.க்கு 350 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணிக்காக சுப்மன் கில் அபாரமாக ஆடி 208 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஆட்டம் இந்திய அணிக்கு பெரிதும் உதவியது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ரோகித், 34 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த கோலியும், இஷான் கிஷனும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் உடன் 65 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா உடன் 74 ரன்களுக்கும் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் கில். சூர்யகுமார் 31 ரன்களிலும், பாண்டியா 28 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் விரைவாக பெவிலியன் திரும்பி இருந்தனர். அதே நேரத்தில் சுமார் 26 பந்துகள் வரை இந்திய அணி பவுண்டரி விளாசாமல் இருந்தது. இருந்தாலும் கடைசி மூன்று ஓவர்களில் கில் வானவேடிக்கை காட்டி இருந்தார். சிக்ஸர் மழை பொழிந்த அவர் கடைசி ஓவரில் 149 பந்துகளில் 208 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணி 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது. அந்த அணி சார்பில் மிட்செல் மற்றும் ஹென்றி ஷிப்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE