மெஸ்ஸி Vs ரொனால்டோ: அல்-நசர் கிளப் அணியுடன் பிஎஸ்ஜி விளையாட வாய்ப்பு?

By செய்திப்பிரிவு

சென்னை: கால்பந்தாட்ட உலகின் ஆல்-டைம் சிறந்த வீரர்களில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகலின் ரொனால்டோவும் நிச்சயம் இருப்பார்கள். இந்தச் சூழலில் இருவரும் மீண்டும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு அமைந்துள்ளது. இருவரும் தங்கள் கிளப் அணிக்காக ஒரே போட்டியில் எதிரெதிராக விளையாடும் வாய்ப்பு அமைந்துள்ளது.

மெஸ்ஸி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஜி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ, சவுதி அரேபியாவை சேர்ந்த அல்-நசர் கிளப் அணியில் இணைந்துள்ளார். அவர் அந்த அணிக்காக விளையாட இருந்த முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

இந்தச் சூழலில் பிஎஸ்ஜி அணி, சவுதியில் அல்-நசர் அணியுடன் விளையாட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் இது நடப்பு மாதமான ஜனவரியில் நடக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் பிஎஸ்ஜி அணி சவுதியில் அல்-நசருடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக அது தள்ளிப்போனது.

இந்த நிலையில், ஒப்பந்தத்தின்படி பிஎஸ்ஜி அணி தள்ளிப்போன அந்தப் போட்டியில் இப்போது விளையாட உள்ளதாம். அதனால் பிஎஸ்ஜி, அல்-நசருடன் விளையாடினால் மெஸ்ஸியும், ரொனால்டோவும் நேருக்கு நேராக பலப்பரீட்சை செய்து விளையாடும் வாய்ப்பு அமைந்துள்ளது. பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸி மட்டுமல்லாது நெய்மர், எம்பாப்பே, ஹக்கிமி போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE