ரிஷப் பந்த்-க்கு உதவிய போக்குவரத்து ஊழியர்களுக்கு மத்திய அரசின் விருது

By செய்திப்பிரிவு

டேராடூன்: கார் விபத்தில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ரிஷப் பந்த்தை விபத்தில் இருந்து காப்பாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு மத்திய அரசின் விருது வழங்கப்படவுள்ளது. ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியிருந்த போது அவரை, ஹரியாணா போக்குவரத்து கழக ஊழியர்கள் சுசில்குமார், பரம்ஜீத் ஆகியோர் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். இவர்கள் இருவரும் ஹரித்துவாரில் இருந்து பானிபட்டுக்கு இயக்கப்பட்ட பேருந்தில் பணியில் இருந்தனர். சாலையில் கார் விபத்தில் சிக்கியதை பார்த்த சுசில்குமாரும், பரம்ஜீத்தும் பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவந்து சரியான நேரத்தில் ரிஷப் பந்த்தை மீட்டனர். இவர்களின் மனிதநேயத்துக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் ஏற்கனவே, பானிபட் பணிமனை சார்பில் பாராட்டு கடிதமும், கேடயமும் வழங்கப்பட்டது.

அதேபோல் டிரைவர் சுசில் குமார், நடத்துநர் பரம்ஜீத் ஆகியோரை வரும் குடியரசு தின விழாவின்போது கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது என உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறிய நிலையில், தற்போது இருவரும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'நற்கருணை வீரன்' என்று விருதால் கௌரவிக்கப்பட உள்ளனர். உத்தரகண்ட் டிஜிபி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE