சிட்னி: கிரிக்கெட் உலகில் யார் சிறந்த கேப்டன் என்ற விவாதம் அவ்வப்போது நடப்பது உண்டு. அந்தப் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பெயர் நிச்சயம் இருக்கும். இந்தச் சூழலில் பாண்டிங்கை காட்டிலும் தோனி சற்று தலைசிறந்த கேப்டன் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக்.
அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். இதனை தனது யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்துள்ளார். பாண்டிங் மற்றும் தோனி என இருவரும் தங்கள் அணியை வழிநடத்தி உலகக் கோப்பையை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தோனி ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் வென்ற கேப்டனாக உள்ளார்.
“தரமான வீரர்கள் இடம்பெற்ற சிறந்த அணியைதான் இருவரும் மிகச் சிறப்பாக வழிநடத்தினர். அதன் மூலம் இருவரும் பல சாதனைகளை படைத்துள்ளனர். அதனால் நாம் அவர்களிடத்தில் பெரிய வேறுபாடுகளை பார்க்க முடியாது. ஆனால், நான் இதை மட்டும் சொல்வேன்... இந்திய கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் சூழலை அதிகளவில் தோனி கையாண்டவராக இருக்கிறார். அதுதான் பாண்டிங்கை காட்டிலும் தோனி சற்று தலைசிறந்த கேப்டன் என நான் சொல்ல காரணம்.
இது தவிர மற்றொன்று என்னவென்றால் பாண்டிங்கின் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் தெளிவாக இருந்தது. அதனால் ஆட்டத்தில் சிலவற்றை மட்டும் பாண்டிங் கன்ட்ரோல் செய்தால் போதும் என்ற நிலைதான் இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.