T20 WC | விளையாடியது மழை - ஆப்கானிஸ்தான் vs நியூஸிலாந்து போட்டி ரத்து

By செய்திப்பிரிவு

மெல்பேர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் கூட வீசப்படமால் ஆட்டம் ரத்தானது.

இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக மெல்பேர்ன் நகரில் பதிவான மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக, இதே மைதானத்தில் காலையில் நடைபெற்ற இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக ஆட்டத்தின் முடிவு டக்வொர்த் லூயிஸ் சிஸ்டத்தின் கீழ் எடுக்கப்பட்டது. அதன்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

இதனால் சூப்பர் 12 - குரூப் 1 சுற்றில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகள் என மூன்று அணிகளில் எந்த அணி வேண்டுமானாலும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணி, நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தும் ஒரு தோல்வியை தழுவி உள்ளது. நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி கைவிடப்பட்டதால் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

புகுந்து விளையாடும் மழை: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மழை ஆட்டத்தின் முடிவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான சூப்பர் 12 போட்டியும் முன்னதாக மழை காரணமாக கைவிடப்பட்டது. அதேபோல வரும் நாட்களில் நடைபெற உள்ள போட்டிகளில் மழை ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. அது அணிகளின் அரையிறுதி வாய்ப்புகளை பாதிக்க செய்யலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE