குவாஹாட்டி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 237 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்போடு தென்னாப்பிரிக்கா களம் இறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். ரோகித், 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் ராகுல், 24 பந்துகளில் அரை சதம் விளாசினார். அவர் 57 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் கோலியும், சூர்யகுமார் யாதவும் இணைந்து விளையாடினார். சூர்யகுமார் யாதவ், 18 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். இறுதி ஓவர்கள் நெருங்கிய நிலையில் கோலி தனது அதிரடியை தொடங்கினார். சூர்யகுமார் யாதவ், 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட்டானார். 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இருவரும் 102 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
» மரணத்துடன் போராடும் குழந்தைகளை மகிழ்வித்த நிகழ்ச்சி
» காவிக் கொடி, ஜெய் ஸ்ரீராம் முழக்கம்... - பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ டீசர் எப்படி?
பின்னர் தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்தார். அவர் 7 பந்துகளில் 17 ரன்கள் குவித்தார். மறுபக்கம் கோலி 28 பந்துகளில் 49 ரன்களை குவித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது. தற்போது தென்னாப்பிரிக்க அணி 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.