டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.30 கோடி பரிசு

By செய்திப்பிரிவு

துபாய்: ஆடவருக்கான டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

இதில் சூப்பர் 12 சுற்றில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகள் முதல் சுற்று ஆட்டங்களில் இருந்து தேர்வாகும்.

முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் உள்ளன.

இந்த இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் சூப்பர் 12 சுற்றில் கலந்துகொள்ளும்.

இந்நிலையில் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.13.30 கோடியைபெறும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.65 கோடி கிடைக்கும். அரை இறுதியில் தோல்வியை சந்திக்கும் இரு அணிகளும் தலா ரூ.4.56 கோடியை பெறும். சூப்பர் 12 சுற்றில் வெளியேறும் 8 அணிகளும் தலா ரூ.57 லட்சம் பரிசுத் தொகையை எடுத்துச் செல்லும்.

முதல் சுற்றில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ.32.58 லட்சம் கிடைக்கும். இந்த வகையில் முதல் சுற்றில் 12 ஆட்டங்களுக்கு சுமார் ரூ.3.91 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. முதல் சுற்றுடன் வெளியேறும் 4 அணிகள் தலா ரூ.32.58 லட்சம் பெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE