ஜூலியஸ் பேர் கோப்பை செஸ்: கால் இறுதி சுற்றில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இணையதளம் வாயிலாக நடைபெற்று வந்த இந்த தொடரின் முதற்கட்ட போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். 15 சுற்றுகள் கொண்ட இந்தத் போட்டியில் 4-வது நாளான நேற்று கடைசி 3 சுற்றுகள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தார். ஒரு ஆட்டத்தை டிரா செய்தார். ஒட்டுமொத்தமாக 15 சுற்றில் அர்ஜூன் எரிகைசி 7 வெற்றி, 4 டிரா, 4 தோல்விகளுடன் 25 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.

பிரக்ஞானந்தா தலா ஒரு வெற்றி, தோல்வி, டிராவை பதிவுசெய்தார். 15 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா 5 வெற்றி, 8 டிரா, 2 தோல்விகளுடன் 23 புள்ளிகள் பெற்று 4-வது இடம் பிடித்தார்.

உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் கடைசி 3 ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தினார். 10 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 34 புள்ளிகள் குவித்து கார்ல்சன் முதலிடம் பிடித்தார்.

கால் இறுதி சுற்றில் அர்ஜூன் எரிகைசி, அமெரிக்காவின் யோ கிறிஸ்டோபரை எதிர்கொள்கிறார். பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை சந்திக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE