நியூஸி-ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: சஞ்சு சாம்சன் தலைமையில் இந்திய-ஏ அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நியூஸிலாந்து-ஏ அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய-ஏ அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சஞ்சு சாம்சன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையில் இந்தத் தொடர் நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அனைத்து போட்டிகளும் சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. நியூசிலாந்து-ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் இடம்பெறவில்லை. அவர் அணியில் இல்லாதது குறித்து ரசிகர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் அவர். இருந்தும் அவருக்கு பெரிய தொடர்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. வரும் 28-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக அவர் படம் இருக்கும் டி-ஷர்டை அணிய ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதாக சில செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்திய ஏ அணி: பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் பட்டிதார், சஞ்சு சாம்சன் (கேப்டன்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஷாபாஸ் அகமது, ராகுல் சாஹர், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் அங்கத் பவா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE