ஆசிய கோப்பை | 2-வது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்

By செய்திப்பிரிவு

ஜார்ஜா: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-வது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஜார்ஜாவில் நடந்த இன்றைய போட்டியில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கையை வீழ்த்தியது. அந்த உற்சாகத்தில் இன்று வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச முன்வரிசை வீரர்களை ஆப்கன் அணியின் ரஷீத் கான் மற்றும் முஜீப் இணைந்து கட்டுப்படுத்த ஒவ்வொருவராக வீழ்ந்தனர். இதனால் 89 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கடைசிநேரத்தில் ஆல் ரவுண்டர் மொசாடெக் ஹொசைன் 48 ரன்கள் சேர்க்க, வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. ஆப்கன் தரப்பில் ரஷீத், முஜீப் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய ஆப்கன் அணிக்கு ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இணை மெதுவான துவக்கம் கொடுத்தாலும் விக்கெட்டை விரைவாகவே பறிகொடுத்தனர். நான்கு ஓவர்கள் இடைவெளியில் ஆப்கன் அணியின் முதல் 3 விக்கெட் பறிபோனது. என்றாலும், இப்ராஹிம் ஜாட்ரன், நஜிபுல்லா ஜாட்ரன் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக நஜிபுல்லா சிக்ஸர்களாக விளாசி சீக்கிரமாகவே மேட்சை முடித்தார்.

17 பந்துகளை சந்தித்த நஜிபுல்லா 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உடன் 43 ரன்களும், இப்ராஹிம் 41 பந்துகளை சந்தித்து 42 ரன்களும் சேர்க்க 18.3 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து ஆப்கன் அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் 2வது வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE