“கோலி ஃபார்முக்கு திரும்பி ரன்கள் சேர்க்க வேண்டும்” - ஹாங்காங் கேப்டன் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என தாங்கள் விரும்புவதாக ஹாங்காங் அணியின் கேப்டன் நிசாகத் கான் (Nizakat Khan) தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் நாளை ஆசிய கோப்பை தொடரில் பலப்பரீட்சை செய்ய உள்ளன.

நடப்பு ஆசிய கோப்பையின் முதல் சுற்று போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பெற்றுள்ளன. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. குரூப் சுற்றின் அடுத்த போட்டியில் ஹாங்காங் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

“நான் கோலியின் மிகப்பெரிய ரசிகன். அவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதோடு அவர் இந்திய அணிக்காக பழையபடி ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். கடந்த முறை ஆசிய கோப்பை (2018) தொடரில் நாங்கள் 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் இந்திய அணிக்கு எதிராக ஆட்டத்தை இழந்தோம். டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் எப்போது ஒரு பவுலர் சிறந்த ஸ்பெல் வீசுவார், ஒரு பேட்ஸ்மேன் விரைந்து ரன் சேர்ப்பார் என்பது நமக்கு தெரியாது. கடந்த காலங்களில் வலுவான அணிகள் அசோசியேட் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவி உள்ளன. நேர்மறையான எண்ணத்துடன் இந்த போட்டியை நாங்கள் அணுக உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE