ஐபிஎல் | கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் சந்திரகாந்த் பண்டிட்... யார் இவர்?

By செய்திப்பிரிவு

ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், எதிர்வரும் 2023 சீசன் முதல் பொறுப்பை ஏற்பார் எனத் தெரிகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் இந்த அணியின் உரிமையாளர்களாக உள்ளனர். கடந்த ஏப்ரல்-மே மாதம் நடைபெற்ற 15-வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதற்கு முந்தைய சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது அந்த அணி.

இந்தச் சூழலில் இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக சக்சஸ் ரேட் கொண்டுள்ள பயிற்சியாளர் என அறியப்படும் சந்திரகாந்த் பண்டிட்டை கொல்கத்தா அணி நிர்வாகம் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த அணி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

கொல்கத்தா அணியுடனான இந்த வாய்ப்பை தான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார் சந்திரகாந்த் பண்டிட். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் வழிநடத்தும் அணிகள்தான் பெரும்பாலும் சாம்பியன் பட்டம் வெல்கின்றன. இதுவரையில் மும்பைக்கு 3, விதர்பாவுக்கு 2, மத்திய பிரதேசத்திற்கு 1 என ஆறு ரஞ்சிக் கோப்பைகளை தான் பயிற்சி கொடுத்த அணியை வெல்லச் செய்துள்ளார்.

முன்னதாக, தன்னால் எந்தவொரு வெளிநாட்டு பயிற்சியாளருக்கு கீழும் பணியாற்ற முடியாது என கடந்த ஜூன் வாக்கில் அவர் தெரிவித்திருந்தார். அதனால்தான் தன்னால் ஐபிஎல் கிரிக்கெட்டில் பணி செய்ய முடியவில்லை எனவும் சொல்லியிருந்தார். ஷாருக்கான் உடனான சந்திப்பு குறித்தும் அப்போது அவர் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE