ஊக்கமருந்து விவகாரம்: தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டு தடை

By செய்திப்பிரிவு

சென்னை: ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இவர் பங்கேற்க வேண்டிய நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியான காரணத்தால் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

24 வயதான தனலட்சுமி தமிழகத்தைச் சேர்ந்தவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றவர். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தொடரில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹீமா தாஸை பின்னுக்கு தள்ளி பந்தய தூரத்தை 23.21 நொடிகளில் கடந்திருந்தார்.

நடப்பு ஆண்டில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் நாட்டின் அதிவேக ஓட்டக்காரராக தனலட்சுமி அறியப்படுகிறார். கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாத்தி நகரில் ஜூன் மாதம் நடைபெற்ற Qosanov Athletics Meet விளையாட்டு நிகழ்வில் 200 மீட்டர் தூரத்தை 22.89 நொடிகளில் கடந்து அசத்தி இருந்தார். அதன் மூல உலக தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ளும் தகுதியை பெற்றார்.

இத்தகைய சூழலில்தான் Metandienone எனும் அனபோலிக் ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டை அவர் பயன்படுத்தியது ஊக்கமருந்து பரிசோதனையில் தெரியவந்தது. இந்த மருந்தை WADA (உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம்) தடை செய்த பட்டியல்களில் இடம் பெற்றுள்ளது.

வழக்கமாக இது மாதிரியான விவகாரங்களில் நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக வழக்கம். ஆனால் தனலட்சுமிக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த மே 1, 2022 முதல் அவர் வென்ற பதக்கங்கள், பட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் சென்னையில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான விளையாட்டு தொடரில் அவர் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE