பர்மிங்காம்: இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, நடப்பு காமன்வெல்த் போட்டிகள் ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் நியூசிலாந்து வீராங்கனை கெய்ட்லின் வாட்ஸை (Kaitlyn Watts) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக, ரவுண்ட் ஆப் 32 ஆட்டத்தில் பார்படாஸ் வீராங்கனை மேகன் பெஸ்ட்டை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இருந்தார். தொடர்ந்து நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 ஆட்டத்தில் நியூசிலாந்து வீராங்கனை வாட்ஸை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இருந்தார்.
இந்த போட்டியில் 11-8 என முதல் செட்டை கைப்பற்றினார் ஜோஷ்னா. இருந்தும் 9-11 என இரண்டாவது செட்டை அவர் இழந்திருந்தார். இருப்பினும் ஆர்ப்பரித்து எழுந்த அவர் மூன்று மற்றும் நான்காவது செட்டை 11-4, 11-6 என கைப்பற்றி அசத்தினார். இதில் நான்காவது செட் மிகவும் பரபரப்பாக இருந்தது. 6-6 என புள்ளிகள் சமனில் இருக்க அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜோஷ்னா.
இந்த வெற்றியின் மூலம் இப்போது காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இந்த போட்டியில் கனடா வீராங்கனை ஹோலி நோட்டனுக்கு எதிராக விளையாடுகிறார். ஹோலி, நடப்பு காமன்வெல்த்தில் இதுவே ஒரு செட்டை கூட இழந்ததில்லை. அவர் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் 3-0 என்ற நேர் செட் கணக்கில் வென்றுள்ளார்.
“இந்திய அணி நிச்சயம் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும். ஆனால் இந்த முறை ஒற்றையர் பிரிவில் பதக்கம் வெல்வதற்கான முனைப்பை ஆட்டத்தில் வெளிப்படுத்துவோம்” என தொடர் தொடங்குவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார் ஜோஷ்னா. அவர் சொன்னது போலவே ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கான பதக்க கனவை இப்போது உயிர்ப்போடு வைத்துள்ளார் அவர்.