“அவருக்காக அவரது சாதனைகள் பேசும்” - கோலி குறித்து பட்லர்

By செய்திப்பிரிவு

லண்டன்: “அவருக்காக அவர் படைத்துள்ள சாதனைகள் பேசும்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர்.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து பார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,709 ரன்களை எடுத்துள்ளார்.

இருந்தும், இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அதனால் அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்தை எடுத்து வைத்து வருகின்றனர். இப்போது அவருக்கு ஆதரவாக பேசி உள்ளார் பட்லர்

"அவரும் ஒரு மனிதர் தான் என்பதை அறியும் போது புத்துணர்ச்சி அளிக்கிறது. அவர் கிரிக்கெட் உலகின் மகத்தான வீரர்களில் ஒருவர். அவர் பல ஆண்டுகளாக அயராது ரன் சேர்த்தவர். அதன் மூலம் இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்தவர். அவர் ஒரு க்ளாஸான வீரர். அவருக்காக அவரது சாதனைகள் பேசும். இது (ஃபார்ம்-அவுட்) எல்லாம் சில காலம்தான்" என பட்லர் தெரிவித்துள்ளார். இதனை அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் மற்றும் டி20 என எதிலும் கோலி இடம்பெறவில்லை. அவருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE