எட்ஜ்பாஸ்டன்: இந்திய கிரிக்கெட் அணி கடந்த முறை இங்கிலாந்து பயணித்தபோது டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தபடி போட்டியை பார்த்துக் கொண்டு அணியின் பயிற்சியாளராக செயல்பட்டவர் ரவி சாஸ்திரி. இந்த முறை இந்தியப் பயணத்தில் அவர் வர்ணனையாளராக கமென்டரி பாக்ஸை ஆட்கொண்டுள்ளார். இந்த ஓராண்டில் நிகழ்ந்த மாற்றம் இது.
இந்திய அணி கடந்த ஆண்டு கோலி தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. அந்தப் பயணத்தின் போது இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடிய நிலையில் கடைசி போட்டி கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இப்போது அந்தத் தொடரில் ஒத்திவைக்கப்பட்ட கடைசி போட்டி தான் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்த முறை இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இயங்கி வருகிறார். இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. அதனால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றியோ அல்லது சமனில் நிறைவு செய்தால் கூட தொடரை வென்று அசத்தும்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக அவர் சர்வதேச போட்டியை வர்ணனை செய்யத் தொடங்கி உள்ளார். முன்னதாக 15-வது ஐபிஎல் சீசனில் அவர் இந்தி மொழி வர்ணனையாளராக செயல்பட்டார். இதற்காக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். லண்டனில் கடந்த வாரம் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமை அவர் சந்தித்திருந்தார். அந்தப் படத்தையும் பகிர்ந்திருந்தார்.
» IND vs ENG | அவுட் கொடுத்த நடுவர்... DRS ரிவ்யூவில் முடிவை மாற்றிய புஜாரா; ஆனால்…
» IND vs ENG | ஆடும் லெவனில் அஸ்வின் ஏன் இல்லை? - வலுக்கும் விவாதம்
எட்ஜ்பாஸ்டன் போட்டிக்கான ப்ரீ-அனாலிஸிஸ் பணியையும் அவர் மேற்கொண்டார். வர்ணனையாளர் பணியை செய்வதில் ரவி சாஸ்திரி கில்லாடி. இந்த பணி அவருக்கு புதிதல்ல. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி விளாசிய அந்த சிக்ஸரை அழகாக வர்ணனை செய்தவர் அவர். அதனை யாராலும் மறக்க முடியாது. இப்போது அவர் மீண்டும் அந்தப் பணியை கையில் எடுத்துள்ளதை அடுத்து பலரும் அதனை வரவேற்றுள்ளனர்.