புது டெல்லி: ''எதிர்பார்ப்புகள் வலி கொடுக்கிறது'' என ட்வீட் செய்துள்ளார் கிரிக்கெட் வீரர் ராகுல் திவாட்டியா. இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அவர் இதனைச் சொல்லி இருக்கலாம் எனத் தெரிகிறது.
29 வயதான ராகுல் திவாட்டியா, டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹரியானா அணிக்காக விளையாடி வருகிறார். ஆல்-ரவுண்டரான அவர் வலது கையில் பந்து வீசும் லெக் பிரேக் பவுலர். இடது கை பேட்ஸ்மேன். இப்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது அணிக்காக சிறப்பான ஃபினிஷிங் டச் கொடுத்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பதில் பெயர் போனவர். அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக அதை செய்திருந்தார்.
2020 ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி கவனம் ஈர்த்தவர். அதன் பலனாக 2021-இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இந்திய அணியில் இடம் பிடித்தார் திவாட்டியா. இருந்தாலும் அவர் அதில் விளையாடவில்லை. அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2022 ஐபிஎல் தொடரில் 9 சிக்ஸர்கள் மற்றும் 22 பவுண்டரிகளை அவர் விளாசி இருந்தார். இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி, ஹர்திக் பாண்டியா தலைமையில் பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த அணியில் ராகுல் திவாட்டியா இடம் பெறவில்லை. அதை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது திவாட்டியாவின் ட்வீட்.
''எதிர்பார்ப்புகள் வலி கொடுக்கிறது'' என ட்வீட் செய்துள்ளார். அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் ரசிகர்கள் அதற்கு பதில் அளித்து வருகின்றனர். 'அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்' என ரசிகர் ஒருவர் அவருக்குச் சொல்லி இருந்தார்.