IPL 2022 | லக்னோவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது அந்த அணி.

நடப்பு ஐபிஎல் சீசனின் 63-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் ஆறு விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது ராஜஸ்தான். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது லக்னோ.

அந்த அணிக்காக டிகாக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது லக்னோ. பவர்பிளேவின் கடைசி ஓவரில் ராகுல், தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் தீபக் ஹூடா மற்றும் குர்ணால் பாண்டியாவும் இணைந்து 65 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருப்பினும் அது அந்த அணிக்கு பலன் கொடுக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது லக்னோ.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது லக்னோ. முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தான் அணிக்காக அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் (41 ரன்கள்), படிக்கல் (39 ரன்கள்), சாம்சன் (32 ரன்கள்) எடுத்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE