2023 ஹாக்கி உலகக் கோப்பையை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை நிறுவும் பணியை மேற்கொண்டு வருகிறது ஒடிசா. கடந்த 2018-இல் ஹாக்கி உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தி இருந்தது ஒடிசா.
அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் கோப்பை தொடர் சற்று தள்ளிப்போயுள்ளது.
"ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சி என்பது எங்கள் மாநில முதல்வருக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதன் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான ஏற்பட்டு பணிகள் பிரம்மாண்ட அளவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் நிச்சயம் ஹாக்கி விளையாட்டுக்கு கொடுக்கப்படும் ஊக்கம். புவனேஷ்வரில் 15000 பார்வையாளர்கள் போட்டிகளை பார்க்கலாம். ரூர்கேலாவில் இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. அதில் 20000 பார்வையாளர்கள் போட்டிகளை பார்க்கலாம்" என தெரிவித்துள்ளார் விளையாட்டு துறை செயலாளர் வினில் கிருஷ்ணா.
சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறதாம். மழை, வெயில், புயல் என பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு இடையே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மைதானத்தில் ஹாக்கி போட்டிகளை பார்ப்பது உலகிலேயே சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.