சென்னையில் கண் மருத்துவமனைத் திறப்பு விழாவுக்கு வருகை தந்தார் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி.
நேற்று மதியம் அவர் கரையஞ்சாவடியில் டி.ஆர்.ஆர். ஐ கேர் சிகிச்சை மற்றும் ஆக்யுலோபிளாஸ்டி மருத்துவமனைத் திறப்பு விழாவுக்கு வருகை தந்தபோது ரசிகர்கள் அங்கு கூடி நின்று “தோனி தோனி” என்று ஆரவாரமாகக் கோஷமிட்டனர்.
அந்தப் பரபரப்பிலும் தோனியின் நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டது:
“நிறைய பேருக்கு கண் பிரச்சனை வந்து இந்த மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று நான் கூறுவதற்கில்லை. ஆகவே இந்த மருத்துவமனை நிறைய நோயாளிகளுடன் சிறப்புற விளங்கவேண்டும் என்று என்னால் வாழ்த்த முடியாது. ஆனால் யார் இங்கு வந்தாலும் சிறந்த சிகிச்சை பெறுவார்கள் என்று கூறக்கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்த சீசனில் எனக்குப் பிடித்த சென்னைக்கு இது என்னுடைய முதல் வருகை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இங்கு நடைபெறவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் சென்னையின் எண்ணற்ற ரசிகர்களின் ஆதரவு எங்கள் பக்கம் இருந்தது. அவர்கள்தான் எங்கள் பலம். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் போடு”
என்று உற்சாகம் காட்டினார் தோனி.
இந்த விழாவில் என்.சீனிவாசன் கலந்து கொண்டார். தோனியை அவர் 'ரோல் மாடல்’ என்றார்.