ஷேன் வார்னுக்கு கவுரவம் | சிறப்பு ஜெர்சி அணிந்து களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: மறைந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னை கவுரவிக்கும் விதமாக நாளை ஐபிஎல் போட்டியில் சிறப்பு ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன், கடந்த மார்ச் 4-ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவு செய்தியை அறிந்து கிரிக்கெட் உலகமே மீளா துயரத்தில் மூழ்கியது. டெஸ்ட், ஒருநாள் என சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஒரு ரவுண்டு வந்தவர் வார்ன். ஐபிஎல் கிரிக்கெட் களத்திலும் விளையாடியுள்ளார். வீரராகவும், பயிற்சியாளராகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பயணித்தவர். ஐபிஎல் 2008 சீசனில் (முதல் சீசன்) ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றபோது வார்ன் தான் கேப்டன்.

இந்நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக நாளைய போட்டியில் சிறப்பு ஜெர்சி அணிந்து விளையாடுகிறது ராஜஸ்தான். இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனை அந்த அணி அறிவித்துள்ளது. நாளைய போட்டியில் ராஜஸ்தான் வீரர்கள் 'S23' என்ற இனியஷலை தங்களது ஜெர்சியின் காலரில் பொறித்து விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 'S' ஷேன் வார்னையும், '23' அவரது ஜெர்சி நம்பரையும் குறிப்பிடுகிறது.

ராஜஸ்தான் அணி நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தற்போது உள்ளது. மேட்ச் வின்னர்கள் அதிகம் நிறைந்த அணியாக உள்ளது ராஜஸ்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE