அப்பாவின் பாணியில் கோல் பதிவு செய்ததை கொண்டாடிய ரொனால்டோவின் மகன்

By செய்திப்பிரிவு

மாட்ரிட்: 12 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டியில் கோல் பதிவு செய்ததை தனது அப்பாவின் பாணியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ரொனால்டோவின் மகன். இது தந்தையைப் போல் மகன் என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.

கால்பந்தாட்ட உலகில் அதிக கோல்களை பதிவு செய்த வீரராக அறியப்படுபவர் ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டுக்காரர். கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். 37 வயதான அவருக்கு நான்கு குழந்தைகள். அதில் மூத்தவர் தான் ரொனால்டோ ஜூனியர்.11 வயதான ரொனால்டோ ஜூனியர் தற்போது 12 வயதுக்கு உட்பட்டோருக்கான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார்.

அண்மையில் அவர் இரண்டு கோல்களை அந்த அணிக்காக பதிவு செய்திருந்தார். இதில் ஸ்பெயின் நாட்டு கால்பந்தாட்ட அணிக்கு எதிராக பதிவு செய்த கோலும் அடங்கும். அந்த கோலை அவர் அடித்ததும் தனது அப்பாவின் பாணியில் அதனை கொண்டாடி தீர்த்துள்ளார். இதனை ஸியூ ஸ்டைல் என ரொனால்டோவை பின்தொடர்பவர்கள் சொல்வதுண்டு. கோல் பதிவு செய்யும் நேரங்களில் ரொனால்டோ இந்த பாணியை பின்பற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அதையே இப்போது அவரது மகனும் செய்துள்ளார்.

இது சமூக வலைதளத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த போட்டியில் அவர் 68-வது நிமிடத்தில் இந்த கோலை பதிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்து வழியில் தனது மகனும் கால்பந்தாட்ட வீரனாக உருவாக்க வேண்டும் என தான் விரும்புவதாக ரொனால்டோ சொல்லியிருந்தார். இப்போது அது நிஜமாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE