IPL 2022 | லியாம் லிவிங்ஸ்டோன் மீண்டும் அதிரடி - பஞ்சாப் அணி 189 ரன்கள் குவிப்பு 

By செய்திப்பிரிவு

மும்பை: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தின் 16 லீக் போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை சேர்த்தது.

15-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வுசெய்தார். அதன்படி பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால், ஷிகர் தவான் இணை துவக்கம் கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது பஞ்சாப் அணி. ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார் மயங்க் அகர்வால்.

இதையடுத்து களத்துக்கு வந்த ஜானி பேர்ஸ்டோவ் ஷிகர் தவானுடன் கைகோர்த்தார். ஆனால், அவரும் நீண்ட நேரம் நிலைக்காமல் லாக்கி பெர்குசன் வீசிய 4வது ஓவரில் 8 ரன்களில் அவுட்டாகி மைதானத்திலிருந்து வெளியேறினார். லியாம் லிவிங்ஸ்டோன், ஷிகர் தவானுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 10 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை சேர்த்திருந்தது. 10 ஓவர் வரை தாக்குப்பிடித்த ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்திருந்தபோது ரஷித் கான் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்ப ஜிதேஷ் ஷர்மா களமிறங்கினார். மறுபுறம் லியாம் லிவிங்ஸ்டோன் குஜராத் பவுலர்களுக்கு 4 சிக்ஸ்களை அடித்து வான வேடிக்கை காட்டினார். அதிரடியாக ஆடிய அவர் 21 பந்துகளில் 50 ரன்களை எட்டினார்.

அடுத்தடுத்து வந்த ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான், ரபாடா, வைபவ் அரோரா ஆகியோர் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் பஞ்சாப் அணியின் விக்கெட் சீட்டுக்கட்டைப்போல சரியத் தொடங்கியது. அதன்படி 20 ஓவர் இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 189 ரன்களை குவித்தது. அந்த அணி தரப்பில் 27 பந்துகளில் 67 ரன்களை எடுத்து லியாம் லிவிங்க்ஸ்டோன் அதிரடி காட்டினார். குஜராத் அணி தரப்பில் முஹம்மது சமி, ஹர்திக் பாண்ட்யா, லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், ரஷீத்கான் 3விக்கெட்டையும், தர்ஷன் நல்கன்டே 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE