8.4.63-இல் பிறந்து 8463 ரன்கள் சேர்த்து அசத்திய கிரிக்கெட் வீரர் | என்னவொரு அதிசயம்

By செய்திப்பிரிவு

ஏப்ரல் 8, 1963-இல் பிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் 8463 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார். இது தனித்துவமிக்க தற்செயலான அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த அற்புத சாதனைக்கு சொந்தக்காரர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்ட் (Alec Stewart) தான். கடந்த 1963-இல் இதே நாளில் லண்டன் நகரில் பிறந்தவர் அவர். ஸ்டூவர்டின் அப்பா மிக்கி ஸ்டூவர்ட் இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர். அதனால் அப்பாவின் வழியில் கிரிக்கெட் வீரராகவே வளர்த்துள்ளார். இளம் வயதில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக அறியப்பட்டுள்ளார். அவ்வப்போது விக்கெட் கீப்பிங் பணியையும் கவனித்து வந்துள்ளார்.

1989 முதல் சர்வதேச கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். இங்கிலாந்து அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் பணியை சிறப்பாக செய்து வந்துள்ளார் ஸ்டூவர்ட். தொடர்ந்து 1998 வாக்கில் கேப்டனாகவும் அணியை வழி நடத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக அவர் மொத்தம் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8463 ரன்களை சேர்த்துள்ளார். இந்த ரன்கள் அவரது பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது தான் தற்செயலானது. மொத்தம் 15 சதங்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளார். 2003 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இங்கிலாந்து அணிக்காக 170 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார். அதன் மூலம் 4777 ரன்களை அவர் சேர்த்துள்ளார். 26 வயதில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமான அவர் 40 வயது வரை விளையாடி அசத்தியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE