ஆர்லியன்ஸ்: இந்திய பேட்மிண்டன் வீரர் மிதுன் மஞ்சுநாத், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது, அவர் விளையாடிய முதல் பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு (BWF) இறுதிப் போட்டியாகும்.
23 வயதான அவர் 11-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் ஆட்டத்தை இழந்தார். அவர் பிரெஞ்சு நாட்டு வீரர் டோமா ஜூனியர் போபோவுக்கு எதிராக இறுதி ஆட்டத்தில் விளையாடி இருந்தார். முதல் செட்டில் முன்னிலை பெற்று, பின்னர் பின்தங்கி அந்த செட்டை இழந்தார் மிதுன். இரண்டாவது செட்டில் இருவரும் கடுமையாக போட்டியிட்டனர். முடிவில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் அந்த செட்டை இழந்தார்.
இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக அண்மையில் நடந்த பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு தொடர்களில் முத்திரை பதித்துள்ளனர். இந்தியன் ஓபன், ஜெர்மன் ஓபன், ஆல்-இங்கிலாந்து ஓபன், ஸ்விஸ் ஓபன் மாதிரியான தொடர்களில் இந்திய வீரர்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடியுள்ளனர்.
லக்ஷயா சென், பி.வி.சிந்து, பிரணாய் மற்றும் மிதுன் என வரிசையாக இந்திய வீரர்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியன் ஓபனில் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். அது தவிர ஜெர்மன் மற்றும் ஆல்-இங்கிலாந்து ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் விளையாடி இருந்தார். பி.வி.சிந்து, ஸ்விஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.